காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தானின் நிபந்தனையற்ற ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், “காஷ்மீர் நட்புறவு தின” கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்றை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.
இன்று (05) காலை நடைபெற்ற இந்த விழாவில், பல வெளிநாட்டு தூதுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாகிஸ்தான் சமூகத்தினர், காஷ்மீர் நலன்விரும்பிகள் மற்றும் இலங்கை ஊடக பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முகமாக, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் காஷ்மீர் நட்புறவு தின செய்திகள், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தக இணைப்பாளரால் வாசிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முக்கிய பேச்சாளர்களாக பொருளாதார அபிவிருத்தி ஆலோசனைக் குழு சபை உறுப்பினர் ஷிராஸ் யூனாஸ், இளம் முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் செயலாளர் திருமதி சூரியா ரிஸ்வி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பயனுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வினை வலியுறுத்திய இவர்கள், சமய நல்லிணக்கத்தினதும் சகலரதும் அமைதியான சகவாழ்வினதும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.
மேலும், இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில் இந்தியப் படைகள் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பதில் உயர்ஸ்தானிகர் வாஜித் ஹசன் ஹஷேமி அவர்களின் சொற்பொழிவுடன் கருத்தரங்கு நிறைவு பெற்றது.
இதன் போது, கருத்துத் தெரிவித்த அவர், காஷ்மீர் சகோதர, சகோதரிகளுடன் தோளோடு தோள் நின்று எப்போதும் துணை நிற்போம் என்ற பாகிஸ்தான் அரசினதும் மக்களினதும் உறுதிப்பாட்டினை வலியுறுத்தினார்.
இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய துருப்புக்களின் கொடூரமான வன்முறைக்கு உட்பட்டுள்ளது என்றும், இந்த மனித உரிமை மீறல்களை உலக நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொள்ள வேண்டிய காலம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
” ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரச்சனை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும், பாதுகாப்பு கவுன்சில் அதன் சொந்த தீர்மானங்களை செயல்படுத்தி பேரழிவினை தடுக்க வேண்டும்.
இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் இந்திய அரசின் மிருகத்தனமான செயல்களால் காஷ்மீரில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையானது, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது ” என்றும் பதில் உயர் ஸ்தானிகர் சுட்டிக் காட்டினார்.
இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் மனித உரிமை மீறல்களை சித்திரிக்கும் படங்கள் இந்நிகழ்வின் புகைப்படக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதோடு, இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரின் அழகிய பிரதேசங்கள் மற்றும் இந்திய படைகளின் வன்முறையை வெளிப்படுத்தும் டிஜிட்டல் வீடியோக்களும் இந்நிகழ்வின் போது காண்பிக்கப்பட்டன.