ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நிறைவேறியுள்ளதால் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை வழங்கிய முதல் நாடாகியுள்ளது பிரான்ஸ்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அங்குள்ள பெண் செயல்பாட்டாளர்கள் குரல் கொடுத்து வந்தனர். குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது அடிப்படை உரிமை இல்லை என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு பிறகு பிரான்சில் கருக்கலைப்பு உரிமையை பெண்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பிரான்சில் உள்ள பெண் செயல்பாட்டாளர்கள் குரல் கொடுத்து வந்தனர்.
இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இதற்கான உறுதிமொழியை அளித்து இருந்தார். இந்த நிலையில், தான், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் அடிப்படை உரிமையாக கரு கலைப்பை அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேறியுள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டுக்கூட்டத்தில் கருக்கலைப்பு மசோதாவிற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரவு வாக்களித்தால் போதும் என்ற நிலை இருந்தது.
ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை வழங்கும் முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
கருக்கலைப்பு நிறைவேற்றப்பட்டதை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் திரண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் இது தொடர்பாக கூறுகையில், “நாட்டின் பெண்கள் அனைவருக்கும் நாங்கள் ஒரு செய்தி சொல்கிறோம். உங்கள் உடல் உங்களுக்கு சொந்தம். அதில் யாரும் எந்த முடிவும் செய்ய முடியாது” என்றார்.