காஸா போரில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் அமெரிக்கா முழுவதும் கல்லூரி வளாகங்களில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன ஆதரவாளர்களுக்கும், இஸ்ரேல் ஆதரவாளர்களுக்குமிடையே இன்று (மே 1) அதிகாலை ஏற்பட்ட மோதலில் பல மாணவர்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன ஆதரவாளர்கள் முகாமிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் ஆதரவாளர்கள் பலர் பல்கலைக்கழகத்தில் புகுந்து பலஸ்தீன ஆதரவாளர்களின் முகாம்களை அகற்ற முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையடுத்து இரு தரப்புக்குமிடையே பயங்கர சண்டை மூண்டது. இரு தரப்பை சேர்ந்தவர்களும், ஒருவரை மாறியொருவர் தாக்கிக் கொண்டதால், கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகம் கலவர பூமியாக மாறியது.
பல்கலைக்கழக துணைவேந்தர் மேரி ஒசாகோ கூறுகையில், லாச் ஏஞ்சல்ஸ் கவால்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்தபின் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.