குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய தாய்மார்கள் தற்போது தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சில தாய்மார்கள்,எனக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் எனவும் தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் சிசேரியன் சத்திரசிகிச்சையின் போது அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
தன்னை போதைப்பொருள் குற்றவாளி மாகந்துரே மதூஸுன் சிறையில் ஒன்றாக தடுத்து வைத்திருந்தனர் என வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.
நான் அவருடன் ஒன்றாக உணவை பகிர்ந்துகொண்டேன், அவருக்கு அருகில் உறங்கினேன், வெள்ளை உடையணிந்த அரசியல்வாதிகளிடம் காணமுடியாத மனிதாபிமானத்தை அவரிடம் கண்டேன் எனவும் வைத்தியர் ஷாபி குறிப்பிட்டுள்ளார்.
எனது மருத்துவ தொழில்துறையை சார்ந்தவர்களே என்னை கைவிட்டனர் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனுரத்த பாதெனிய அவர்களில் ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த தொழில்துறையிலும் தங்களின் நன்மைக்காக செயற்படும் நபர்கள் இருப்பார்கள் நேர்மையாக பேசுவதென்றால் இந்த பாதெனிய என்ற நபர் அந்தநேரத்தில் இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக பணியாற்றியவர் இந்த விடயத்தில் இன்றுவரை மௌனமாக உள்ளார் எனவும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.
எனினும் வைத்தியர் பாதெனியவின் மனைவி இரண்டாவது தடவை கருத்தரித்த போது நானே பிரசவம் பார்த்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களை சமானியர்கள் தெய்வத்திற்கு ஒப்பிடுகின்றனர் ஆனால் அதே தொழில் என்னை பேய்களிடம் ஒப்படைக்க பயன்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ள வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் இந்த மோசமான நினைவுகள் எங்களிற்கு தேவையில்லை நாங்கள் ஆன்மீக ரீதியில் வளமான இலங்கையை கட்டியெழுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மூலம்: இணையம்