ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் நாயகம் என்.எம்.எம். மிஃப்லி

Date:

பெரு மதிப்பிற்குரிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களே,

நீங்கள் ஜனாதிபதி ஆன தருணம் முதல், உங்களை வாழ்த்த உங்களை எவ்வாறு அழைப்பது என்று முடிவு செய்ய இயலாமல் ஒரு சில நாட்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தேன்.

பதவி கிடைத்தவுடன் வானில் பறக்கும் ஏனையவர்கள் போலன்றி, எப்போதும் தரையில் கால்களை பதித்திருக்கும் உங்களை எப்படி அழைத்தாலும் அதை நீங்கள் பொருட்படுத்தப் போவதில்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் இறுதியில் இதை எழுதத் துணிவு கொண்டேன்.

இலங்கையின் ஜனாதிபதி பதவியில் படிந்துள்ள அசுத்தங்களையும், மாசுக்களையும் போக்குவதே தாங்கள் அப்பதவியை ஆசித்த பிரதான நோக்கம் என்றபடியால், அப்பதவியால் நீங்கள் பெருமை அடைவதை விட அப்பதிவிதான் உங்களால் பெருமை அடந்துள்ளது எனறே நான் கருதுகின்றேன்.

எனது திருமண நாளுக்கு அடுத்ததாக என்னுடைய வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாள் நீங்கள் வெற்றி வாகை சூடிய அந்த செம்டெம்பர் மாதத்தின் 21 ம் நாளேயாகும். மேலும், அந்நாள் இலங்கையர் பலருடைய வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாளாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பாகும்.

உங்களின் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி நாடு முழுவதிலும் ஒரு கோலாகலத்தை தோற்றுவித்துள்ளமைக்கு முக்கியக் காரணம், இந்தநாட்டின் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினரின் சுதந்திரம் மற்றும் வளம் பற்றிய கனவு இனி நனவாகும் என்ற நம்பிக்கையே.

மேலும் நடக்கவே முடியாது என்று நம்பிக்கை இழந்திருந்த ஒரு விடயம் இனி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் தாங்கள் வெற்றி காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அன்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே, நான் உங்களை நேரில் பார்த்ததுமில்லை ஒரு வார்த்தை பேசியதுமில்லை. இருப்பினும், ஊடகங்களில் உங்கள் உரைகளை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உங்களின் சுவாரசியமான சொல்லாட்சிiயுடன் அதில் பொதிந்திருந்த சிறந்த, ஆக்கபூர்மான கருத்துக்களே என்னை அதிகம் கவர்ந்தன.

குதூகலமாக இருந்திருக்க வேண்டிய உங்களுடைய இளமைப்பருவம் உட்பட உங்கள் வாழ்நாளின் முப்பது ஆண்டுகளை விட அதிக காலப்பகுதியை இந்த நாட்டின் விமோசனத்திட்காக நீங்கள் அர்ப்பணித்துள்ளீர்கள்.

இந்த நீண்ட நெடுங்காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட சவால்கள், துன்புறுத்தல்கள், அவமதிப்புக்கள் எண்ணிலடங்காதவை என்பதையும் தேசத்தின் நலனிட்காக நீங்கள் அவற்றையெல்லாம் சகித்து வந்தீர்கள் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

இந்த நீண்ட காலத்தில் நீங்கள் பெற்ற அரசியல் அனுபவத்தால், இவ்வணப்பு மிகு நாடு விழுந்துள்ள அழிவின் ஆழத்தை புரிந்து கொள்ளவும், அதே போல என்றாவது ஓர் நாள் ஆடசியும் அதிகாரமும் கிடைத்தால் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள் யாவை என்பது பற்றியும் நீங்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றமை இந்நாட்டின் அதிர்ஷடமே ஆகும்.

மேலும், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த நீங்கள் அதே போன்ற பெரும்பான்மையான இலங்கையர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உணர்வுகளை நன்கு உணர்திருப்பீர்கள் என்பதிலும் துளியளவும் எமக்கு சந்தேகம் கிடையாது.

அதே சமயம், நாட்டின் அதிகாரத்தை தம் வசம் வைத்திருந்த ஊழல்மிகு மேற்குலத்திருடனும் நேரடியாக மோதிக்கொண்டிருந்தவர் என்ற வகையில் அவர்களின் பித்தலாட்டங்கள் பற்றியும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

எனவே, இந்த தேசத்தை கட்டியெழுப்ப என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு சிறந்த மதிப்பீட்டை நீங்கள் பெற்றிருப்பது சர்வ நிச்சயம்.

தங்களுக்கு அதிகாரம் கிடைத்தால், பின் விளைவுகளை பொருட்படுத்தாமலும், எவருடைய செல்வாக்கையோ அந்தஸ்த்தையோ பாராமலும் சட்டத்தை எழுத்து பிசகாமல் நிலை நிறுத்துவதாக நீங்கள் வெகு காலமாக கூறி வந்தீர்கள்.

இதிலிருந்தே நம் நாட்டின் முக்கிய பிரச்சனை இங்கு சட்டத்தின் ஆளுனை இல்லாமையே என்ற மகத்தான உண்மையை நீங்கள் நன்கு புரிந்துள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது.

ஒரு சாதாரண குடிமகன் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் நாயகம் என்ற வகையில், வழிகாட்டும் அளவுகோலாக எப்போதும் சட்டத்தின் ஆளுகைக்கு முன்னுரிமை வழங்குமாறு அன்புடன் நான் தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இன்று நம் நாட்டில் நீதி பறிபோய், அதிகார துஷ;பிரயோகம் செய்யப்பட்டு, ஊழல், முறைகேடுகள் கரைபுரண்டோடி, சமூகம் சீர் கெட்டு, மனித உரிமைகள் மீறப்பட்டு, இன மோதல்கள் உருவாகி, ஜனநாயகக் கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது.

இவற்றின் விளைவாக அரசாங்கத்தின் மற்றும் நீதித்துறையின் மீதான பொது மக்கள் நம்பிக்கையும் சீர்குழைந்து பல சமூகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளது.

1978 ஆண்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே சட்டத்தின் ஆளுகை சீர்குழைய ஆரம்பித்தது என்பது உன்னிப்பாக நோக்கும் போது தெளிவாகும் ஒரு முக்கிய விடயமாகும்.

இதன் காரணமகவே 1990 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற போராட்டங்கள் அதிகரித்துள்ளன.

நிறைவேற்று ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் தீவிர வாதமும் இன வாதமும் வேகமாக பரவியதுடன் இது தற்செயலாக அல்லது எதிர்பாராமல் ஏற்பட்டதொரு நிலை அல்ல.

மாறாக, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் கீழ் ஒரு தனிநபருக்கு எல்லையில்லா அதிகாரங்களை வழங்கிய விவேகமற்ற செயலால் ஏற்பட்ட கொடிய பின்விளைவே அது.

கடந்த காலத்தில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தாம் பதவிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக உறுதியளித்து வந்த போதிலும், அவர்கள் எவரும் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

அதாவது, பதவி கையில் கிடைத்ததன் பின் அவர்களின் பதவி மோகமும், சுயநலமும், சர்வாதிகார வெறியும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை வழங்கும் எல்லையற்ற அதிகாரத்தை இழக்க இடமளிக்கவில்லை.

பதவிக்கு வந்தால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக நீங்கள் அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விடயத்தை உறுதிப்படுத்துவதானது, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ளவர்கள் மனதில் நீதி மற்றும் நியாய உணர்வை உறுதி படுத்தும்.

குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் தாம் ஏனைய எவரையும் விட தாழ்ந்தவர்களோ அல்லது தாம் இந்நாட்டின் இரண்டாம் தர குடிமக்களோ அல்ல என்ற உணர்வை நிலைநிறுத்த வேண்டுமாயின் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும்.

அவ்வாறு இல்லாத போது சிறுபான்மையினர் மாற்று வழிகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்க முடியாது என்பதோடு அவ்வழிகள் பொதுவாக நல்லவையாக இருப்பதில்லை. சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தோற்றம், சிறுபான்மையினரின் சதவீதத்திற்கேற்ப அரச வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்காகப் போராடுவது போன்ற இன அடிப்படையிலான போராட்டங்கள் இத்தகைய சூழலில்தான் வெடிக்கின்றன.

இது இறுதியில் நாட்டில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும். உண்மையில் இது போன்றதொரு நிலைமைதான் நம் நாட்டிட்கும் ஏற்பட்டுள்ளது.

நம் அழகிய தாய்த்திரு நாட்டை உலகில் வளமானதொரு நாடாக மாற்றுவதற்கான ஆற்றல் மற்றும் உண்மையான உந்துதல் உங்களிடம் மட்டுமே உள்ளது என்று உறுதியாக நான் நம்புவதாலேயே என்னுடைய இக்கருத்துக்களை நான் தங்களுடன் இவ்வாறு பகிர்ந்து கொள்கின்றேன்.

சட்டத்தை நிலை நிறுத்திய வண்ணம், அனைத்துப் பிரிவு குடிமக்களையும் சமமாக நடத்தும் ஒரு நல்லாட்சி இருக்கும் பட்சத்தில், சிறூபான்மை அரசியல் கட்சிகள், இயக்கங்கள, சங்கங்கள், அமைப்புகள், பாடசாலைகள் போன்ற எதனுடைய தேவையும் இங்கு இருக்காது.

ஒரு தேசத்திற்கு அழகைச் சேர்க்கும் பன்முகத்தன்மையை ஒழிக்க வேண்டும் அல்லது தனித்துவ கலாச்சார, மத அடையாளங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பது இதன் கருத்தல்ல. அந்த தனிப்பட்ட அடையாளங்கள் இருக்கும் போது ‘நாம் அனைவரும் இலங்கையர்’ என்ற ஒற்றுமை மனப்பான்மையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதையே நான் கூற முயற்சிக்கின்றேன். அப்போதுதான் தீவிரவாதம், பயங்கரவாதம், மதவாதம், இனவாதம் போன்றவை ஒழிந்து நம் நாடு வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போட இயலும்.

இலங்கை வாழ் மக்கள் சுமார் அரை நூற்றாண்டு காலமாக எதிர்பார்த்திருந்த உண்மையான மாற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடியும் என்பது என் போன்ற உங்களுக்கு வாக்களித்தவர்கக்கு –ஏன், தற்சயம் வாக்களிக்காதவர்களுக்குக் கூட- துளிர் விட்டு வரும் ஒரு நம்பிக்கையாகும்.

என்னைப் போலவே பலருடைய கற்பனையிலும் உள்ளதொரு இலங்கை எப்படி இருக்குமெனில், அதில் மட்டக்களப்பில் மக்களின் மனதைக் கவர்ந்த ஒரு சிங்களவர் ஆளுநராக இருப்பார்.

சட்டத்தை மதிக்கும் ஒரு தமிழர் மாத்தறையில் பொலிஸ் அத்தியட்சகராக இருப்பார்.
யாழ்பாணத்திலலோ இன மத பேதமின்றி கடமையாற்றும் ஒரு சிநேகபூர்வ முஸ்லிம் ஆளுநராக இருப்பார்.

சட்டத்தின் ஆட்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு முன்மாதிரி மாமனிதன் நாட்டின் நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்கும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இது சர்த்தியமாகும் என்ற ஏக்கத்துடன நாம் பால காலம் காத்திருந்தோமாம்.

அந்த அதிசயமானது, அனுர குமார திஸாநாயக்க என்ற வடிவத்தில் கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி நிகழ்ந்து விட்டது என்றே நாம் நம்புகின்றோம்.

இங்கனம் உங்களைப் போன்றே நாட்டை நேசிக்கும்,

என்.எம்.எம்.மிஃப்லி,
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின்
முன்னாள் பிரதி ஆணையாளர் நாயகம்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...