தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது வேட்பு மனுப் பட்டியலை மாவட்ட மட்டத்தில் இறுதி செய்து வருவதாக கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
போட்டியாளர்களிடையே விருப்பு வாக்குகளுக்கான போட்டியைத் தவிர்ப்பதற்கான பொறிமுறையையும் எமது கட்சி தயாரித்துள்ளது.
எவ்வாறாயினும், விருப்பு வாக்குகள் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் விதத்தில் எந்த வகையிலும் எமது கட்சி தலையிடாது. விருப்பு வாக்குகள் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்திற்குள் நுழைவதை எமது கட்சி உறுதி செய்யும்.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து NPP வேட்பாளர்களையும் சந்தித்து இந்த விடயங்கள் அறிவுறுத்தப்படும்.
ஏனைய கட்சிகளைப் போல் அல்லாமல், எமது கட்சியின் வேட்பு மனுக்கள் மாவட்ட மட்டத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இறுதி செய்யப்பட்ட பட்டியல்கள் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படும்.
எமது கட்சி வேட்பு மனுக்களிலும், தேசியப் பட்டியலிலும் அதிகமான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கும் அதேவேளை இரண்டு பட்டியல்களிலும் அதிக தொழில் வல்லுனர்களும் அடங்குவர்.
பொதுத் தேர்தலில் எமது கட்சியுடன் வேறு அரசியல் கட்சிகள் அல்லது குழுக்கள் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. NPP பதாகையின் கீழ் போட்டியிட பலரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளது. அத்தகைய நபர்கள் மாவட்ட மட்ட கட்சி குழுக்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.