பலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக லெபனானில் உயிரிழப்பு எண்ணிக்கை 3000ஐ நெருங்கியுள்ளது.
பலஸ்தீனத்தின் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக கூறி ஹமாஸ் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது.
ஆனால் ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பு, எனவே இதுபோன்ற அமைப்புகளிலிருந்து எங்களை காப்பாற்றவே இராணுவ கட்டமைப்புகளை நாங்கள் பலப்படுத்தி வைத்திருக்கிறோம் என இஸ்ரேல் கூறி வருகிறது.
இப்படியாக இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸை கொல்வதே நோக்கம் என்று கூறி இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டாலும், இதில் 40,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
அதேபோல 1 லட்சத்திற்கும் அதிமான மக்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் மக்கள் உள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டனர். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் ஹமாஸ் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இதன் மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பலஸ்தீனத்துடனான போர் முடிந்துவிட்டது, இப்போது லெபனானுடன் போர் தொடங்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. இந்த தாக்குதலில் பொதுமக்களும் நூற்றுக்கணக்கில் இறந்துள்ளனர். மொத்தமாக இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 3000ஐ நெருங்கியுள்ளது.
ஹமாஸுக்கு பயிற்சி கொடுத்தது இந்த ஹிஸ்புல்லா அமைப்புதான். இதுவும் மேற்கு நாடுகளால் தீவிரவாத அமைப்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஹமாஸ் போன்று இது சிறிய அமைப்பு கிடையாது. இதற்கு ஈரான் நேரடியாக சப்போர்ட் செய்கிறது. ஹமாஸை வீழ்த்தவே ஓராண்டு ஆன நிலையில், ஹிஸ்புல்லாவை வீழ்த்த வேண்டும் எனில் நிச்சயம் நீண்ட நாட்களாகும் என சொல்லப்படுகிறது. நீண்ட நாட்கள் ஆனாலுமே கூட ஹிஸ்புல்லாவை வீழ்த்துவது ஓரளவுதான் சாத்தியம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த போர் நீண்ட காலம் நடக்கும், இதில் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கு முன்னர் சர்வதேச நாடுகள் தலையிட்டு இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.