அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் புதிதாக பதவியேற்ற இலங்கைக்கான பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் அன்தலிப் எலியாஸ் ஆகியோரிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யா தலைமையகத்தில் 7ஆம் திகதி இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களால் ஜம்இய்யாவின் பணிகள், செயற்பாடுகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டதோடு, இலங்கை வாழ் முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்தும் தெளிவுகள் அளிக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் அவர்கள்,
பங்களாதேஷ் முஸ்லிம்களின் பூர்வீகம் மற்றும் வரலாறு தொடர்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதோடு, இலங்கை நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்தோடும் சிறப்பாக வாழ்வதற்கு தனது முயற்சிகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்கள்.
இக்கலந்துரையாடலின் இறுதியில், உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு ஜம்இய்யாவின் வெளியீடுகள் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.