அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையாகும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி தெரிவித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி (Khaled Nasser AlAmeri) சபாநாயகர் அசோக ரன்வலவைவ நேற்று (09) மரியாதையின் நிமித்தம் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்றுமாறு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் இலங்கைக்கான தூதுவர், சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அரசாங்கங்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருந்ததாகவும், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் குறித்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி உரையாற்றுவதை தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையென்றும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இது விடயத்தில் இலங்கையுடன் தமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள ஐக்கிய அரபு இராச்சியம் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தொழில்துறை சார்ந்தவர்களாகவும், அமைதியான சமூகத்தினராகவும் வாழ்வது தொடர்பில் நன்மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.