உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 2034 ஆம் ஆண்டுக்கான “பிஃபா” (FIFA) உலகக் கிண்ணம் சவூதி அரேபியாவில் நடைபெறும் என்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை (11) அறிவித்தது.
2034 “ஃபிஃபா” உலகக் கிண்ண நிகழ்வினை நடத்துவதற்கான போட்டி ஏலத்தில் சவூதி அரேபியா மட்டுமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சவூதி அரேபியா உலகக் கிண்ணப் போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான், உலக அரங்கில் நாட்டை உயர்த்துவதற்கான நீண்ட கால முயற்சியின் மிகப்பெரிய நகர்வு இதுவாகும்.
எனினும், 2018 இல் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை மற்றும் நாட்டிற்குள் ஏனைய விமர்சகர்களை சிறையில் அடைத்தது உட்பட – கடுமையான மனித உரிமை மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நாட்டிற்கு இவ்வளவு பெரிய, லாபகரமான நிகழ்வின் நடத்துவது குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், 2030 “ஃபிஃபா” உலகக் கிண்ணத்தை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொராக்கோ இணைந்து நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 104 போட்டிகளும் சவூதி அரேபியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக 5 நகரங்களில் புதிதாக 8 மைதானம் கட்டப்பட உள்ளது. துவக்க போட்டிக்காக 92,000 பேர் அமரும் வகையில் ரியாத்தில் மைதானம் உருவாக உள்ளது.