வடக்கு காசாவுக்கு திரும்பும் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள்!

Date:

பல்லாயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 15 மாதங்களுக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

அவ்வகையில், முதற்கட்டமாக 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது.

அவர்களுக்கு ஈடாக 200 பலஸ்தீனிய பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. ஒப்பந்தப்படி, பணயக் கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

அர்பல் யாஹுட் என்ற இஸ்ரேலிய சிவில் பணயக்கைதியை விடுவிக்காததை அடுத்து இஸ்ரேல், பலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்புவதை முடக்கியது.

இதனால் பாதை திறக்கப்படும் வரை கடந்த இரு தினங்களாக பலஸ்தீனர்கள் வீதிகளில் காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை வடக்கு காசாவை ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கும் வகையில் இஸ்ரேல் அமைப்பித்திருக்கும் நெட்சரிம் தாழ்வாரத்தை திறந்ததை அடுத்து பலஸ்தீனர்கள் வடக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

நேற்றுக் காலை 7 மணி தொடக்கம் அல் ரஷீத் வீதியை கடந்து கால்நடையாக வடக்கு காசாவுக்கு திரும்புவதற்கும் காலை 9 மணி தொடக்கம் சலா அல்தீன் வீதி ஊடாக வாகனங்களில் அங்கு செல்வதற்கும் இஸ்ரேல் அனுமதி அளித்தது.

இதனையடுத்து மக்கள் தமது உடைமைகளை சுமந்தபடி வடக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். வீதி நெடுகவும் பெரும் திரளான மக்கள் பயணிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள் வெளியிட்டன.

‘வீட்டுக்கு திரும்புவது, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இணைவது மற்றும் தொடர்ச்சியாக வாழ்ந்த வீட்டை பார்ப்பது பெரும் உணர்வுமிக்கதாக உள்ளது’ என்று இடம்யெர்ந்துள்ள இப்ராஹிம் அபூ ஹசரா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

மக்கள் வடக்கு காசாவுக்கு திரும்புவது பெரும் வெற்றி என்று அறிவித்திருக்கும் ஹமாஸ், இது ஆக்கிரமிப்பாளர்களின் திட்டத்தின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ளது.

காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்த போரில் வடக்கு காசா மீது உக்கிர தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலியப் படை அந்தப் பகுதியை முற்றுகையில் வைத்திருந்தது.

இதில் வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்த 650,000 பேர் வரை அங்கு திரும்புவதற்கு எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக போரின் ஆரம்பத்தில் தரைவழி படை நடவடிக்கைக்காக வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை 1.1 மில்லியன் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருந்தது.

காசாவில் இஸ்ரேல் இடைவிடாது நடத்திய தாக்குதல்களில் அந்தப் பகுதி வெறும் இடிபாடுகளாக மாறியிருப்பதோடு 47,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

 

 

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...