புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று (19) கேள்வியெழுப்பிய நிலையில் அமைச்சர் நளிந்தவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
அதன்போது, தயாசிறி ஜயசேகர, “புதுக்கடை நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் வேடத்தில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு ஒன்றை நடத்தியுள்ளார், அதில் கணேமுல்ல சஞ்சீவ என்ற நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று நேற்று இரவும் மித்தேனியவில் தந்தை உட்பட இரண்டு குழந்தைகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, இப்போது இது இந்த நாட்டில் ஒரு பெரிய பாதுகாப்புப் பிரச்சினை.” என கூறியிருந்தார்.
அதற்கு பதளிக்கும் விதமாக கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த, “பாதாள உலக நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது எனவே, இவற்றை கட்டுபடுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் பாதாள உலகமும், கருப்புப் பணமும், போதைப்பொருள் கடத்தலும் உள்ளடக்கப்பட்டுள்ளன, இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிலர் இலங்கையில் கூட இல்லை.
நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்திற்கு வெளிப்படுத்த முடியாது.
ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையாக தலையிடுகிறது. பாதாள உலகத்திற்கு சுதந்திரம் வழங்கப்படாது.” என்றார்.