கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து இன்று காலை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹார என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த போதிலும், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, என்பதுடன் கந்தானை பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
இருவரும் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.