இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குச் சென்று அங்கு ஆத்திரமூட்டும் வகையில் பிரார்த்தனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது மத்திய கிழக்கின் மிகவும் உணர்திறன் வாய்ந்த இடத்தில், பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள ஒரு ஏற்பாட்டை மீறுவதாக பலஸ்தீன தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை சவூதி அரேபியாவும் பல அரபு மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் இது ஒரு ‘ஆத்திரமூட்டும்’ செயல் என்றும், புனித தலத்தின் வரலாற்று மற்றும் சட்டப்பூர்வ நிலையை அப்பட்டமாக மீறுவதாகவும் இது கூறியுள்ளது.
சவூதி வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேலிய அதிகாரிகளின் இத்தகைய தொடர்ச்சியான மீறல்கள் பிராந்தியத்தில் பதற்றங்களைத் தூண்டும் என்று எச்சரித்துள்ளது.
ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன் அல்-அக்ஸா மசூதியின் தற்போதைய நிலையை ‘கடுமையான மீறல்’ என்றும், சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறுவதாகவும் தெரிவித்துள்ளது.
அவரது வருகையின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள யூதர்களால் டெம்பிள் மவுண்ட் என்று அழைக்கப்படும் வளாகத்தில் பென்-க்விர் யூதர் பிரார்த்தனைகளை வழிநடத்துவதைக் காட்டுகின்றன.
யூதர்கள் அந்த இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பிரார்த்தனை செய்ய முடியாது. இந்த நிலையில், இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் இது தொடர்பில், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், அங்கு முஸ்லிம் வழிபாட்டை மட்டுமே அனுமதிக்கும் தற்போதைய ஒப்பந்தத்தைப் பராமரிக்கும் இஸ்ரேலின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.
ஹமாஸ் இதனை, பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் ஆக்கிரமிப்புகளை ஆழப்படுத்தும் செயல் என்று கூறியுள்ளது.