தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் எதிர்க்கட்சிகளைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸை முன்னிலைப்படுத்தி , இந்திய சார்பு முன்னாள் இராஜதந்திரி மிலிந்த மொரகொடாவின் முன்னெடுப்பில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸின் இல்லத்தில் வாராந்தம் இதற்கான கூட்டம் நடைபெறுவதாகவும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கூட்டணியில் , ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரிவு, புதிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய குடியரசு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும் . முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இதில் இணைவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் டெய்லி மிரர் செய்தி மேலும் கூறுகின்றது. .
இருப்பினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் தனது கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதாக முன்னிறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கூட்டணியில் பங்கேற்க மறுத்துள்ளார்.
இப்போதைக்கு ஒரு தலைவர் இல்லாமல் செயல்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இந்தக் கூட்டணியில் இணையவில்லை. 2029 ஜனாதிபதி தேர்தலை அண்மித்த வேளையில் பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.