ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, சந்தேகநபரை ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 2 மில்லியன் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (09) காலை சிறைச்சாலை அதிகாரிகளால், அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.