நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முந்தைய காலங்களில் பல அனர்த்தங்களின் போது புத்தளத்தில் பெரிய பள்ளிவாசல், ஜம்மியத்துல் உலமா, மாநகர சபை மற்றும் பல சமூக அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த நிவாரணப் பணிகள் நாடு முழுவதும் பாராட்டைப் பெற்றிருந்தன.
ஆனால் இம்முறை ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது இதேபோன்ற ஒருங்கிணைந்த நிவாரண மையம் புத்தளத்தில் இதுவரை உருவாக்கப்படவில்லை என்ற கேள்வி கவனம் பெறுகிறது.
புத்தளம் மக்கள் இதற்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட சுனாமி போன்ற பல்வேறு அனர்த்தங்களின் போது பெரிய பள்ளிவாசல், ஜம்மியத்துல் உலமா, நகர சபையின் கூட்டுத் தலைமையின் கீழ் முழு புத்தளம் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதில் முன் நின்றவர்கள்.
இம்முறை ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் ஒரிரு நாட்களில் எம்மை விட்டுச் சென்றுவிட்டது. உயிரிழப்புகள் ஒன்று கூட ஏற்படாது இறைவன் எம்மை பாதுகாத்தான். ஒப்பீட்டளவில் பெரிய பொருட் சேதங்கள் ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும்.
இந்நிலையில், வெள்ளத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட கிழக்கு மக்கள் தம்மை சுதாகரித்துக் கொண்டு அடுத்தவர்களுக்காக உதவிக்கரம் நீட்டுகிறனர். இன்றும் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் ஆயிரக் கணக்கில் தஞ்சமடைந்துள்ள நிலையிலும் கொழும்பு வாழ் மக்கள் கம்பளை மக்களுக்காக நிவாரண சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.
இனம் மதம் பாராது முழு இலங்கை வாழ் மக்களும் நிவாரணப் பணிகளில் களமிறங்கியுள்ளனர். இன்னுமொருவரை காப்பாற்றச் சென்று தமது உயிரையே மாய்த்தவர்களின் செய்தியும் கேள்விப்படுகின்றோம்.
சிறுவர்கள் ஆசையுடன் சேகரித்த சல்லி முடைகளை கொண்டு வந்து கொடுக்கின்றனர். ஒரு மூதாட்டி இரண்டு Penadol காடுகளை கொடுத்த மனதை உருக்கும் சம்பவம் இன்று சமூக ஊடகங்களில் வரலாக பரவிவருகிறது.
இருந்தாலும், துடிப்பான இளம் தலைமையினைக் கொண்ட ஜம்மியத்துல் உலமா, இதுவரை இவ்வாறான பணிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்த பெரிய பள்ளி, புத்தளம் மாநகர சபை, அரசியல் தலைமைகள், வாலிப சங்கங்கள், ஸஹீரியன் அமைப்புகள், உப்பு சங்கம், வர்த்தக சங்கம் என ஏகப்பட்ட சமூக தொண்டு நிறுவனங்களைக் கொண்ட எனது ஊரில் மாத்திரம் ஏன் இந்த நற்காரியம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்ற ஆதங்கத்திலேயே இதனை பதிவிடுகிறேன்.
“நிவாரணப் பணிக்கான புத்தளம் மக்கள் செயலகம்” ஒன்றினை பெரிய பள்ளியின் தலைமையில் தாபிப்பதற்கு எமது ஊர் புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலமைகள் என அனைவரும் ஒன்றிணைவோமா..?
