2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நேற்று (01) காலை பஹன ஊடக நிறுவனத்தின் புதிய அலுவலக வளாகத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அமரபுர நிகாயவின் மகாநாயக்கரும், தர்ம சக்தி அமைப்பின் தலைவருமான கௌரவ மாதம்பகம அஸ்ஸாஜி திஸ்ஸ தேரர், ஓய்வுபெற்ற ஆயர் ஆசிரி பி. பெரேரா, ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஞ்சுள கஜநாயக்க, ஜனநாயக சூழலை விரிவுபடுத்துவற்கான நிறுவனத்தின் திட்ட இயக்குநர் சமன் செனவிரத்ன வர்த்தகர் முகமது நுஹுமான் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதில் அமரபுர நிகாயவின் மகாநாயக்கரும், தர்ம சக்தி அமைப்பின் தலைவருமான கௌரவ மாதம்பகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர், புத்தாண்டை ஆசீர்வதித்து துன்பப்படும் மக்களின் ஆன்மீக நல்வாழ்வுக்கு மதத் தலைவர்களின் மகத்தான பங்களிப்பை குறிப்பிட்டார்.
இதன் பின்னர், ஓய்வுபெற்ற ஆயர் ஆசிரி பி.பெரேராவும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒவ்வொரு மதமும் மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகக் கூறியதோடு மனித செயல்பாடுகளால் இயற்கை மனிதர்களிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்கிறது என்பதை இந்தப் பேரழிவு நமக்குக் காட்டுகிறது என்று விளக்கினார்.
புனித குர்ஆனின் ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி, திரு. மஞ்சுள கஜநாயக்க பேசுகையில், மனிதர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளாவிட்டால், அல்லாஹ் ஒருபோதும் யாரையும் மாற்ற மாட்டான் என்ற இக்கருத்து பேரழிவை எதிர்கொள்ளும் போது மக்கள் தமது ஆன்மீக வளர்ச்சிக்காக தம்மை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது எனக்கூறினார்.
பின்னர் இப்பேரழிவின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் சோகமான அனுபவங்களை திரு. சமன் செனவிரத்ன பகிர்ந்து கொண்டதோடு மக்களின் மன அழுத்தம் உடல் ரீதியான அழுத்தத்தை விடவும் தீவிரமானது என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறி வெற்றிகரமான புத்தாண்டுக்கான தனது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற இரு மதத் தலைவர்களுக்கும் இதன்போது நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் இறுதியில் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் புத்தாண்டு சிற்றுண்டி பரிமாறப்பட்டது.

