கடந்த 2020.10.27 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வபாத்தான மர்ஹூம் அஷ்ஷெய்க் எம். எம். ஏ. முபாரக் (மதனி) ஹஸரத் அவர்களின் மறைவு இலங்கை வாழ் முஸ்லீம் மக்களுக்கு ஓர் பேரிழப்பாகும்.
இவர் இஸ்லாமிய சன்மார்க்கத்திற்காக ஆற்றிய சேவைகள், பணிகள் அளப்பரியவை; என்றும் மறக்க முடியாதவை.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் சுமார் நான்கு தசாப்தங்கள் பல பதவிகளிலும் குறிப்பாக தலைவராக, செயலாளராக மற்றும் பத்வா குழுவின் முக்கிய அங்கத்தவராக பொறுப்பேற்று ஜம்இய்யத்துல் உலமா சபையினை வளர்ச்சி, முன்னேற்றத்தின் பால் இட்டுச்செல்ல தன் வாழ்வினை அர்ப்பணித்து செயலாற்றிய இஸ்லாமிய அறிஞர் ஆவார்.
மறைந்த அஷ்ஷெய்க் முபாரக் (மதனி ) ஹஸ்ரத் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கும் மேம்பாட்டிற்கும் பலவழிகளிலும் சேவையாற்றியுள்ளா்.
திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரபு கலாசாலைகளின் ஷரீஆ கல்வி அபிவிருத்திக்காக திணைக்களத்துடன் ஒன்றிணைந்து 1981 ஆம் ஆண்டு தொடக்கம் அரபு கல்லூரிகளிற்கான பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவின் முக்கிய அங்கத்தவராக செயற்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட முதவசித்தா, ஸானவியா ஆகிய பரீட்சைகளுக்கான பாடத்திட்டத்தை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றியவர் ஆவார்.
மேலும் அஹதியா பாடசாலைகளுக்குரிய பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவின் முக்கிய பிரதிநிதியாக அங்கம் வகித்தது மட்டுமின்றி பாடப் புத்தகங்கள் தயாரிப்பிலும் அவரது பாரிய பங்களிப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
இஸ்லாமிய சன்மார்க்க கல்வியின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மர்ஹூம் அஷ்ஷெய்க் முபாரக் (மதனி) ஹஸரத் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். எனவே அவரின் அனைத்து சேவைகளையும் வல்ல அல்லாஹ் பொருந்தி கொண்டு அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை அருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
ஏ.பீ.எம்.அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்