பாகிஸ்தானின் தேசிய தினம் எதிர்வரும் 23 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் Muhammad Saad Khattak மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக, வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் உறுதியளிக்கப்பட்ட திட்டங்களான, நடமாடும் நூலகங்களை அமைத்தல் மற்றும் இலங்கை மாணவர்களுக்கு நூறு மருத்துவ புலமைப்பரிசில்களை மேலதிகமாக வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவாக முன்னெடுக்கவும், இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.