அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது | பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

Date:

“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பது போல நடித்துவிட்டு, அதனை இடது கையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை எவ்வாறு விரைவில் கட்டுப்படுத்தி, நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என உலக நாடுகள் கவனம் செலுத்திய நிலையில், கொரோனாவில் கூட அரசியல் நடத்தி, பேரினவாதிகளை திருப்திப்படுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டது.

கொவிட் – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு உலகில் சிறு பரப்பளவுடைய நாடுகள் கூட அனுமதி வழங்கிய போதும், அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. முஸ்லிம் மக்களின் மத உரிமை மறுக்கப்பட்டதுடன், நம்பிக்கையும் சிதைக்கப்பட்டது. தொழில்நுட்பக்குழு என ஒன்றைக் காரணம் காட்டி தனது குறுகிய அரசியல் நோக்கங்களை ஆளுந்தரப்பு நிறைவேற்றிக் கொண்டது. மக்களின் வலி, வேதனையில் கூட ‘அரசியல் சிற்றின்பம்’ கண்டனர்.

இந்நிலையிலேயே ஜெனிவாத் தொடரும் ஆரம்பமானது. முஸ்லிம் அமைப்புகள் இவ்விடயத்தை சர்வதேசம் வரை கொண்டு சென்றிருந்தன . இதனால் சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்காகவும், முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும் என்ற அறிவிப்பை பிரதமர் விடுத்தார். பிரதமரின் இந்த அறிவிப்பைக் கூட மொட்டு கட்சி உறுப்பினர்கள் நிராகரித்து அரசியல் செய்தனர்.

இதற்கிடையில் இம்ரான் கான் வந்து சென்ற பிறகு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அத்துடன் இப்பிரச்சினை தீர்ந்துவிடும் என மக்கள் கருதினர். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் வலுப்பெற்ற நல் உறவை சீர்குலைக்கும் வகையில் தற்போது ‘இடத்தேர்வு’ பிரச்சினையை அரசு கிளப்பிவிட்டுள்ளது.

அடக்கம் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும் அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கும் செயலே இது . எனவே, பொருத்தமான இடங்களில் சடலங்களை அனுமதிப்பதற்கு இடமளிக்க வேண்டும். மாறாக ஒரு இடம் என அறிவித்து, இது விடயத்தில் மேலும் இழுத்தடிப்பு செய்யக்கூடாது.” – என்றார் வேலுகுமார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...