முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனது சொந்த காணியை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஆவணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கையெழுத்திட்டுள்ளார்.
சுதந்திரபுரம் பகுதியிலுள்ள 15 ஏக்கர் காணியொன்றையே அவர் இவ்வாறு மக்களுக்காக வழங்கியுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
வீ.ஆனந்தசங்கரிக்கு சொந்தமான காணியின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி வசித்து வந்த நிலையில், அந்த காணியை தமக்கே பகிர்ந்தளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தனது காணியை குறித்த மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு, வீ.ஆனந்தசங்கரி, 2019ம் ஆண்டு பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரிடம் எழுத்துமூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கொவிட் பரவல் காரணமாக காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மந்தகதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில், கிளிநொச்சியிலுள்ள வீ.ஆனந்தசங்கரியின் இல்லத்திற்கு சென்ற பிரதேச செயலக அதிகாரிகள், குறித்த காணியை பகிர்ந்தளிப்பது தொடர்பில் இன்று காலை கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலை அடுத்து, தனது காணியை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் ஆவணத்தில் வீ.ஆனந்தசங்கரி கையெழுத்திட்டார்.
தான் கையெழுத்திட்ட ஆவணங்களுக்கு அமைய, காணிகளை உரிய வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கே பகிர்ந்தளிக்குமாறு, வீ.ஆனந்தசங்கரி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த காணி தொடர்பிலான ஆவணங்கள் முறையாக செய்யப்பட்டு, எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன