இலங்கையில் பண்டிகை விடுமுறைக் காலம் முடிவுற்றுள்ள நிலையில் கொரோணா தொற்றாளர்களை இனம் காண நடத்தப்படும் பிசிஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் அதிகரிக்கப்படாவிட்டால் இந்தியாவைப் போன்ற ஒரு மோசமான நிலை இங்கும் ஏற்படலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த பட்சம் தினசரி பத்தாயிரம் பேருக்காவது பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேஷ் பாலசூரிய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ள கருத்தில் முடிவுற்ற பண்டிகைக்கால விடுமுறைகளின் போது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை மிகவும் புறக்கணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலப் பகுதியில் பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே அடுத்து வரும் 14 நாற்கள் மிகவும் அவதானம் மிக்க நாற்களாக அமையப் போகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் தினசரி 5000 பிசிஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இவை மிக அவசரமாக பத்தாயிரமாக அதிகரிக்கப்பட வேண்டும் என பாலசூரிய தெரிவித்துள்ளார்.
குருணாகல், புத்தளம், கம்பஹா கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாற்களாக தொடர்ந்து புதிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.