தனது தாயின் உடலை தன் உறவினர் ஒருவரின் உதவியுடன் மருத்துவமனையிலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தனது இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார்.
கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி ஒட்டுமொத்த தேசமும் திணறிக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு குறைபாடு, மக்களின் அலட்சியம் என பல்வேறு காரணிகளின் காரணமாக உயிர்ச்சேதங்கள் அதிகரித்த படி இருக்கின்றன. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, இடுகாடுகளில் எரியூட்டுவதற்கு வரிசை என தற்போதைய கொரோனா சூழல் மனதை பதை பதைக்க வைக்கிறது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகுளம் மாவட்டம் சிகாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. கடந்த சில நாள்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மஞ்சுளா அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வீட்டு சிகிச்சையில் மஞ்சுளா தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மஞ்சுளாவுக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அதனையடுத்து, அவரது மகன் அவரை காந்திநகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு மஞ்சுளாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகக் கூறியிருக்கின்றனர்.
தாயின் மறைவால் மனமுடைந்துபோன மஞ்சுளாவின் மகன் தனியார் மருத்துவமனையின் நிர்வாகத்தை அணுகி தன் தாயின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், கொரோனா நோயாளியின் உடல் என்பதால் அச்சமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் மஞ்சுளாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்ற மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். கொரோனா நோயாளி உடல் என்பதால் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் என யாரும் மஞ்சுளாவின் உடலை எடுத்துச் செல்ல முன் வராததால் அவரது மகன் மீண்டும் மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சியிருக்கிறார். அவரின் கதறல்களுக்குச் செவி சாய்க்காத ஊழியர்கள் அவரை விரட்டாத குறையாக வெளியே அனுப்பியிருக்கின்றனர்.
யாரும் உடலை எடுத்துச்செல்ல முன் வராததால் மஞ்சுளாவின் மகன் தனது தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் தன் உறவினர் ஒருவரின் உதவியுடன் மருத்துவமனையிலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தனது இல்லத்திற்கு கொண்டு சென்றார். கொரோனா நோயாளியின் உடலை இருசக்கர வாகனத்தில் நடுவில் வைத்துக்கொண்டு இரு நபர்கள் பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.