அட்டாளைச்சேனை அல்- இபாதா கலாசார மன்றம் புனித ரமழான் மாதங்களில் ஹதீஸ் மஜ்லிஸ் பயான் நிகழ்வுகளை கடந்த பத்து வருடங்களாக நடாத்தி வருகின்றது.
அந்த வகையில் இம்முறையும் நடைபெறவிருக்கின்ற ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வுகளின் முதற்கட்டமாக மாபெரும் சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.சி.ஏ. சாபீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,
அல் – இபாதா கலாசார மன்றத்தின் போசகரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டதோடு, அட்டாளைச்சேனை சுகாதார திணைக்களப் பணிப்பாளர் டாக்டர். அகிலன், பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.பாயிஸ், அக்கரைப்பற்று நீர்ப்பாசன திணைக்களப் பொறியியலாளர் விமச் சந்திரன், பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நளீல், கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜவ்பர், பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், கோணாவத்தை அபிவிருத்தி குழுவினர், கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி எதிர்வரும் சனிக்கிழமை (10) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோணாவத்தை பாதையின் இரு மருங்குகளும் சுத்தம் செய்யப்பட இருக்கின்ற சிரமதானப் பணியில், பிரதேசத்தின் இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள், பள்ளிவாசல் சம்மேளனம், பாடசாலைகள், சமூக நிறுவனத்தினர் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டப் படுகின்றனர்.


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)