முன்னாள் சபாநாயகர் மர்ஹும் ஹனீபா முகம்மதின் 101வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் இன்று (26)மாலை மாலிகாவத்தை இஸ்லாமிய மண்டபத்தில் விஷேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலம் சென்ற எம்.எச் முஹம்மத் முஸ்லிம் சமூகத்தின் ஒரு அசையாத தூணாக விளங்கியவர்.அவர் பல்லின சமூகத்தாரிடையே சிறந்த உறவை பேணி வந்தார் இதனால் அனைத்து சமூகத்தினராலும் மிகுந்த ஆதரவையும் , வரவேற்பையும் பெற்றுக் கொண்டார்.
அவருடைய பாராளுமன்ற வாழ்க்கையில் பொரல்லை வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தியதோடு 80% சிங்கள பெரும்பான்மையான வாக்குகளையும் கொண்டிருந்தார்.இவர் கொழும்பின் முதலாவது முஸ்லிம் மேயராக இருந்தது மாத்திரமல்லாது நாட்ளுமன்றத்தில் சபாநாயகராகவும் கடமையாற்றினார்.அத்தோடு இலங்கையின் அரசியலில் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.உலக முஸ்லிம் லீக்கின் அரசியலமைப்பு கவுன்சிலின் ஸ்தாபக உறுப்பினராக இருந்த முஹம்மத் கொழும்பில் இஸ்லாமிய சங்கம் ஒன்றை நிறுவினார் . அதன் மூலம் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கியதோடு பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகின்றது.
கொழும்பில் பிறந்த இவரின் தந்தை புரொக்டராக கடமையாற்றினார்.கொழும்பு வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவனாகவும் , இலங்கையின் கப்பல் துறையிலும் கூடிய ஈடுபாட்டை காட்டி வந்தார்.கொழும்பின் நகராட்சி மன்றத்தின் இளம் உறுப்பினராக முதன் முறையாக 1945ஆம் ஆண்டு கால்பதித்தார்.கமியூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப் பட்ட ஒரு சுயாதீன வேட்பாளராக மாலிகாவத்தை நகராட்சி கட்சியில் போட்டியிட்டார்.
1965ஆம் ஆண்டில் 95%மான சிங்கள வாக்குகளை தன்னுடைய தொகுதியான பொரல்லையில் பெற்று அரசியலில் அமோக வெற்றியீட்டினார்.அத்தோடு அப்போதைய நட்சத்திர இடதுசாரி வேட்பாளரான திருமதி விவியன் குணவர்தனவை விட 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.1965ம் ஆண்டு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதி அமைச்சராக கடமையாற்றினார் மேலும் தனியார் துறை ஊழியர்களுக்கான நன்கொடை வழங்குவதற்கான சட்டத்தையும் , கொழும்பு பிரதேசத்தில் வீடற்றவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கும் நடைமுறையை வலியுறுத்தினார் . இதனடிப்படையில் அவரால் ஆரம்பிக்கப்பட்டதே பொரல்லை மற்றும் மாலிகாவத்தை வீட்டுத்திட்டங்களாகும்.ஜே.ஆர் மற்றும் ஆர் .பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் இருந்த முதலாவது முஸ்லிம் அமைச்சராகவும் , முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்களின் முதலாவது அமைச்சராகவும் இருந்து இலங்கை முஸ்லீம்களின் நலன்களையும் ,. நல்வாழ்வையும் இந்த நாட்டில் நிலைநாட்டிய பெருமைக்குரியவர் எம்.எச் முஹம்மத் என்பது மறுப்பதற்கில்லை.அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு முதன் முதலில் தமிழ் நாட்டில் மர்ஹூம் அப்துல் ஹமீத் பாகவி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட போது, அப்பணிக்கு மிகவும் உறுதுணையாக மர்ஹூம். எம். எச். முஹம்மத் செயற்பட்டார்.