20 க்கு கைஉயர்த்தியவர்கள் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும்
கிண்ணியா மீனவர்கள் தங்களுடைய தொழிலை அச்சமின்றி செய்வதற்கான தகுந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (13) கிண்ணியாவில் அவரது இல்லத்தில் வைத்து இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் .
மேலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையில் தங்களது தொழிலை நிம்மதியாக செய்யமுடியாதுள்ளது என்றும் இதற்கு ஏதேனும் தீர்வே பெறமுடியாதா? எனவும் எங்கள் விடயத்தில் கொஞ்சமாவது கரிசனை காட்டுங்கள் எனவும் மீனவர்கள் என்னிடம் முறையிடுகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட சுருக்கு வலை கொண்டு 7 கடல் மைல் தூரத்திற்கு அப்பால் சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப் பட்டிருந்தாலும் அத்தூரத்தை கிண்ணியா கரையில் இருந்து கணிக்காமல் 9 கடல் மைல் தூரத்தில் இருக்கும் சம்பூர் வெளிச்ச வீட்டில் இருந்து கணித்திருப்பதானது சிறிய ரக இயந்திரப் படகுகள் மூலம் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய அநீதியாகும்.
கிண்ணியா மீனவர்கள் தொழிலுக்காக செல்கின்ற போது கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீன் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், வழக்குகள் தொடர்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
அவர்களது வாக்குகளை பெற்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில்
1)மீனவர்களின் மீன் பிடி கடல் எல்லையை கிண்ணியா கரையில் இருந்து நிர்ணயம் செய்வதற்கும்
2) இம் மீனவர்கள் இடையூறுகள் இன்றி தங்களுடைய தொழிலை தொடர்ந்து செய்வதற்கும்
முறையான அனுமதியை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் இவ்விடயம் ஆளும் கட்சியுடன் நல்லுறவை பேணும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியாத காரியமல்ல எனவும் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களாகிய உங்களால் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாத விடத்து அம்மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலை நிரந்தரமாக கைவிட்டு வேறு தொழில்களை தேடிக் கொள்ளுமாறாவது பகிரங்கமக கூறுங்கள் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலை மேலும் நீடிக்குமாக இருந்தால் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதார உரிமையை பெற்றுக் கொள்வதன் நிமித்தம் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் குதிப்பதை தவிர வேறு வழியில்லாத நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களது போராட்டங்களில் அவர்களின் வாக்குகளை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.
ஹஸ்பர் ஏ ஹலீம்_