பணம் பறிமுதல் செய்யப்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவை நிறுத்துவது குறித்து தோ்தல் ஆணையமே இறுதி முடிவை எடுக்கும் என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்ததாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் பல்வேறு ஆலோசனைகளை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டார். இந்த ஆலோசனைகளைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் “தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெறுகிறது. தோ்தலில் வாக்குக்குப் பணம் அளிப்பதை கட்டுப்படுத்த தோ்தல் ஆணையம் தனது கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான காலத்தில் பல்வேறு தொகுதிகளில் லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை தொகுதியில் ரூ.91.56 லட்சமும், சிவகாசியில் ரூ.45 லட்சமும், பாளையங்கோட்டையில் ரூ.12.71 லட்சமும், விருதுநகரில் ரூ.65 லட்சமும், சைதாப்பேட்டையில் ரூ.1.3 கோடியும், வேலூரில் ரூ.1.06 கோடியும், ஆயிரம் விளக்கில் ரூ.1.23 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவுக்கு முன்பாக பணம் பட்டுவாடா செய்யப்படும் என்ற சந்தேகம் இருப்பதால் இரவு, பகலாக தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், வாக்குக்குப் பணம் கொடுப்பது தொடா்பாக 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் புகார்களை மக்களே தெரிவிக்கலாம். புகார்களை எந்த நேரத்திலும், எப்போது தெரிவித்தாலும் உடனடியாக சம்பவ இடத்துக்குப் பறக்கும் படையினா் செல்வா்.
தமிழகத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் வருமான வரித் துறை, பறக்கும் படையினா் மூலமாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் பறிமுதல் தொடா்பாக, தோ்தல் நடத்தும் அதிகாரி, பொதுப் பார்வையாளா், செலவினப் பார்வையாளா், சிறப்பு செலவினப் பார்வையாளா், தலைமைத் தோ்தல் அதிகாரி ஆகியோர் தோ்தல் ஆணையத்துக்கு தனித்தனியாக தகவல்களை அனுப்பியுள்ளனா்.
இந்த தகவல்கள் அனைத்தையும் இந்தியத் தோ்தல் ஆணையம் பரிசீலிக்கும். இதன்பின்பே, அதிகளவு பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தோ்தல் ரத்தாகுமா அல்லது திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதை ஆணையம் முடிவு செய்யும்” என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.