குறிப்பு * நேற்று 10.04.2021 நூல் வெளியீட்டு விழாவின் போது பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்களின் உரை*
இலங்கை முஸ்லிம் சமூகத்தை அடையாளமிழப்புச் செய்கின்ற சதிகள் அண்மைக்காலமாக நடந்து வருகிறது. அது இனவெறுப்பு வடிவில் பிரஜையின் மனங்கள் தொடக்கம் திருமணச் சட்டத்தில் “முஸ்லிம்கள் தவிர்ந்த” என்ற சொல்லை நீக்கி விடுங்கள் என்ற ரத்ன தேரரின் பிரேரணைவரை மிக விசாலித்திருக்கிறது.
மறுமுனையிலிருந்து தமது கலாச்சாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போரை எவ்வாறு முகங்கொள்வது என்பது குறித்து முஸ்லிம் சமூகம் இன்று திணறி நிற்கிறது. தமது அடையாள இருப்பு குறித்த தடயங்களை வரலாற்றில் ஆழமாக ஊன்றி வைக்க ஏதுவான சம்பவங்கள் எத்தனையோ நிகழ்ந்திருக்கின்ற போதிலும் முஸ்லிம் சமூகம் அவற்றை வராலாற்று ஆவணங்களாக நிலைக்கச் செய்ய தவறி வந்துள்ளது. ஏனைய சமூகங்களால் ஒரு நடுநிலைச் சமுதாயமாக நோக்கப்பட்டு நெருக்குவாரங்களின்றிய வாழ்வியல் ஒழுங்கை அண்மைக் காலம் வரை கொண்டிருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இருப்பினும் முஸ்லிம் சமூகத்தை அடையாள நிர்மூலம் செய்கின்ற ஒரு கலாச்சார படையெடுப்பு பற்றி புத்திஜீவிகளால் ஏற்கனவே ஆங்காங்கே எச்சரிக்கப்பட்டிருந்தும் அதனை முஸ்லிம் அரசியலும், சமூகமும் கண்டு கொள்ளத் தவறிவிட்டது.
அரசியல் வட்டம் கட்சியரசிலியலிலும், ஆன்மீக வட்டம் வகுப்பு வாதத்திலும் ஆழ்ந்து சென்று முஸ்லிம் சமூகம் என்ற பெரும் பலத்தை பல கூறுகளாக உடைத்து விட்டன. கட்சிவாதம், வகுப்புவாதங்களினுள் ஆழமாக ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் தமது வாசிப்பை, தமது பார்வையை சுருக்கிக் கொண்டு கடும்போக்காளர்களாக உருவெடுத்தார்கள்.
இந்த கடும்போக்கு வாதங்கள் எந்தவொரு விடயத்தையும் பரந்துபட்டு நோக்காது அவற்றை குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொண்டன. தொப்பிகள் கலற்றப்பட்டன. ஒரு சமூகம் தமது தொல்லியல் அடையாளமான சியாரங்களை தாமே இடித்து நொறுக்கும் அவல சம்பவங்களும் நிகழ்ந்தன.
அறிஞர், புத்திஜீவிகளின் எந்த ஒரு கருத்தையும் அரசியல் கண்ணாடியினூடு அல்லது ஜமாஅத் கண்ணாடியினூடு பார்ப்பது வழக்கமாகிப் போனது. தூரநோக்கு கொண்ட புத்திஜீவிகளின் மிதவாதக் கருத்துக்கள் எள்ளி நகையாடப்பட்டன. கடும்போக்காளர்களினால் அறிஞர்களின் கெளரவம் சிதைக்கப்பட்டது. அவர்கள் விக்கித்து நின்றார்கள்.
சமுதாயத்தின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள சதிகளை எப்படி முகங்கொடுப்பது, அதற்கு யார் தலைமை வகிப்பது என்ற இக்கட்டான இடத்தில் வந்து நிற்கின்ற இன்றைய சூழ்நிலையில் கட்சிகளாகவும், ஜமாத்துக்களாகவும் கூறுபட்டு வெவ்வேறு கொள்கைகளில் உறைந்து போய் கிடக்கின்ற சிதைந்த சமூகமாக நாம் நிற்கின்றோம்.
இப்பொழுது அரசியலும், ஆன்மீகமும், அறிவியலும் மூன்று திசைகளில் துருவப்பட்டுப் போன ஒரு சிதைந்த சமுதாயமாகவே முஸ்லிம் சமூகம் நின்று கொண்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்க வேண்டிய பொருப்பு அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும், அறிஞர்-புத்திஜீகளுக்கும் இருக்கிறது.
ஆன்மீகத்தால் ஒருங்குபட்ட, அறிஞர்களால் வழிநடாத்தப்படுகின்ற அரசியல் போக்கை கொண்டிருக்கின்ற ஒரு ஒரு அறிவார்ந்த சமூகத்தால் மட்டுமே வரலாற்றில் தமது இருப்பை உறுதி செய்து சுயநிர்ணய உரிமையுடன் வாழ முடியும்.
இளைஞர்கள் தமது வாசிப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும். விடயங்களை பரந்த நோக்கில் அணுக அது ஒன்றே வழி. ஒவ்வொருவரும் தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளின் சிறு சலுகைகளுக்கு விலைபோய் அல்லது கடும்போக்காளர்களின் கொள்கைகளுக்குள் தொலைந்து போய் அவர்களால் ஆட்டுவிக்கப்படுகின்ற அவலத்திலிருந்து இளைஞர்கள் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
எதிர்வர இருக்கின்ற நாட்களில் நாம் முகங்கொடுக்க இருக்கின்ற அடக்குமுறைகளை மிகச் புத்திசாதூர்யமாக அணுகி வெற்றி கொள்ள வேண்டும்.
தேர்தல் முறைமைகள், எல்லை நிர்ணயங்கள், ஏனைய பரிந்துரைகள் அரசாங்கத்தால் கோரப்பட்டபோது முஸ்லிம் அரசியல்துறையால் முஸ்லிம் அறிஞர்கள் கண்டு கொள்ளப்படவில்லை. முஸ்லிகள் புறத்திலிருந்து சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள் மிகச் சொற்பமேயாகும். முஸ்லிம் அரசியலில் தேக்கநிலையடைந்துள்ள அறிஞர் புத்திஜீவிகளின் வெற்றிடம் விரைவாக நிரப்பட வேண்டும்.
சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)’ நூல் வெளியீட்டு விழா 10.04.2021 (சனிக்கிழமை) மருதமுனை, பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்வி, சமூக, சமய, அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பழீல் மொலானா பவுண்டேஷன் அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்கள் மேற்கண்டவாறு உரையாற்றி இருந்தார்.