நாட்டின் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் உஷார் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன .
கொரோணா பிரச்சினை நாட்டில் மிகத்தீவிரமாக பரவத் தொடங்கியிருக்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டின் மேலும் பல பகுதிகள் எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் அல்லது ஒரு பகுதி அளவு முழுநிலை முடக்கம் கொண்டு வரப்படலாம் என்று இந்த தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
நாட்டின் தற்போதைய நிலைமை பற்றி ஆராயும் கூட்டம் பஸில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
அப்போது கொவிட் பரவல் தொடர்பான விடயம் மிகத் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. நீண்ட நேரம் இது தொடர்பாக இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக அறிய கிடைக்கின்றது. சகல அத்தியாவசிய சேவைகளும் குறிப்பிட்ட அளவு ஊழியர்களோடு முழுநேர தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தடவையாக நேற்று கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே தினத்தில் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாவது நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஆகக்கூடுதலான தினசரி தொகை இதுவாக அமைந்திருக்கின்றது.
தற்போது நாட்டின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் covid-19 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றாவிட்டால் நாட்டின் நிலைமை மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று சுகாதார சேவை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முஸ்லிம்கள் புனித ரமழான் பண்டிகையை எதிர்நோக்கியுள்ளனர். தத்தமது வீடுகளுக்குள்ளேயே இந்த பண்டிகையை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம் வெசாக் பண்டிகைகள் முழு அளவில் ரத்து செய்யப்பட்டுள்ள மையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்