சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நேரடிப் பேச்சுவார்த்தைகள் தனது நாட்டில் இடம்பெற்றதாக ஈராக் ஜனாதிபதி பர்ஹம் சாலி முதல் தடவையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
பேரூட்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு இணைய வழியாக அவர் வழங்கிய பேட்டியின் போது இதனை தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் முக்கிய பிரதிநிதிகளும் ஈரானின் முக்கிய பிரதிநிதிகளும் பக்தாதில் நேரடியாக சந்தித்து ஒன்றுக்கு மேற்பட்ட சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சு வார்த்தைகள் இன்னமும் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கான சந்தர்ப்பத்தை தொடர்ந்து வழங்க ஈராக் தயாராக இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான முரண்பாடுகளே மத்திய கிழக்கில் இன்று கொந்தளிப்பு நிலை நீடிப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த இரு நாடுகளும் தனியாக சந்தித்து தமக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டால் அது மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் அமைதியை மீண்டும் நிலைநாட்டும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
