பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளிலிருந்து விலக்கிக்கொள்வதாக நீதியரசர் ஜனக டி சில்வா இன்று (28) வெள்ளிக்கிழமை மன்றில் அறிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன் அரங்கேறிய ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றியமையினாலேயே இந்த தீர்மானத்தினை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.
மேலும், இது தொடர்பான விசாரணைகள் இன்று (28) வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் கே. மலல்கொட, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போதே, நீதியரசர் ஜனக டி சில்வா இந்த அறிவிப்பினை மேற்கொண்டார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.