தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என வர்த்தமானி வெளியிட்டதனை தொடர்ந்து தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர்.
இந்த நெருக்கடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (16) மஸ்கெலியா கிலென்டில் குருப் மஸ்கெலியா லங்கா தோட்ட பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்பாட்டம் சுகாதார நெறிமுறைகளுக்கு அமைவாக கொழுந்து மடுவத்திற்கு முன்னால் நடைபெற்றன.
இந்த தோட்டத்தில் 20 கிலோ தேயிலை கொழுந்து பறித்தால் மாத்திரம் தான் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்றும் இல்லாவிட்டால் ஒரு கிலோவுக்கு 47.50 சதம் மாத்திரம் வழங்கப்படுவதாகவும், எட்டு மணித்தியாலம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பதாகவும், கொழுந்து இருந்தாலும் இல்லா விட்டாலும் 20 கிலோ பறிக்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும், இதனால் தொழிலாளர்கள் பெற்று வந்த சம்பளமும் இல்லாது போய் பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது குறித்து தொழிலாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் மார்ச் மாதம் 05 திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று வர்த்தமானி வெளியிட்டது.
ஆனால் அது எமக்கு கிடைக்கவில்லை. அந்த மாதம் மாத்திரம் தான் 1,000 ரூபா சம்பளம் வழங்கினார்கள்.
ஆனால் அதனை தொடர்ந்து ஏனைய மாதங்களில் ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை.
இது குறித்து தோட்ட நிர்வாகிகளிடம் கேட்டால் நாங்கள் உங்களுக்கு ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்றால் நீங்கள் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். இருபது கிலோ பறிப்பதற்கு கொழுந்தும் கிடையாது அதே நேரம் காலை,பகல் மாலை நிறுவைகளின் போதும் 02 கிலோ வீதம் 06 கிலோ பெண் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திலிருந்து கமிசனாக கொடுக்க வேண்டும். அப்படி என்றால் ஒரு நாள் பேருக்கு 26 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டியுள்ளன.
அவ்வாறு 26 கிலோ கொழுந்து பறிப்பதற்கு கொழுந்து கிடையாது. நாங்கள் வழமையாக எடுத்தது 16 கிலோ, அதே நேரம் ஆண் தொழிலாளர்கள் எட்டு மணித்தியாலம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்றும் சனி, ஞாயிறு தினங்களில் வேலை மருந்து தெளிப்பதற்கு 600 ரூபா தான் சம்பளமாக வழங்குவதாகவும், இதனால் தற்போது தோட்டங்களில் வேலை செய்ய முடியாத நிலைமை உருவாகி இருப்பதாகவும், வறுமை நிலையில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் மேலும் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவதாகவும், எனவே இது குறித்து அரசாங்கமும் அமைச்சர்களும் மலையக மக்கள் பிரதிநிதிகளும் சரியான ஒரு தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.