நாட்டில் கொவிட் தொற்று தொடர்பிலான தரவுகளை வெளியிடும் நிறுவனங்களின் தகவல்களின் பிரகாரம், கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா உயிரிழப்புக்களின் உண்மை தன்மை தெளிவில்லாது காணப்படுகின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபத் தலைவர் டொக்டர் சந்திம எப்பிட்டிகடுவ தெரிவிக்கின்றார்.
இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தரவுகளுக்கு அமைய,நாட்டில் முதல் 500 கொரோனா உயிரிழப்புக்கள், 343 நாட்களில் பதிவானதாக அவர் கூறுகின்றார்.
மேலும், அடுத்த 500 கொரோனா உயிரிழப்புக்கள், 72 நாட்களில் பதிவானதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.எனினும், மூன்றாவது 500 கொரோனா உயிரிழப்புக்கள் 13 நாட்களிலேயே பதிவானதாக அவர் கூறுகின்றார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 500 கொரோனா உயிரிழப்புக்கள் இதைவிடவும் குறைந்த நாட்களிலேயே பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கின்றது.