கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் பொதுமக்களின் உடல்கள் சீல் செய்யப்பட்டு இருப்பதைக் காட்டும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அண்மையில் நடந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் போராட்டங்கள் மற்றும் இலங்கை தாதியர்கள் சங்க போராட்டங்களின் படங்களுடன் இணைந்தவாறே இந்த படங்கள் பரவுகின்றன. இந்த மரணங்கள் தொடர் போராட்டங்கள் மற்றும் பொது அமைதியின்மை காரணமாக ஏற்படுகின்றன என இந்த புகைப்படங்களின் தலைப்புகள் குறிக்கின்றன.
தொடர்புடைய படங்கள்
மூலம் – பேஸ்புக்
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் முறையைப் பயன்படுத்தி மேற்கண்ட படங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்ததில், இந்தப் புகைப்படங்கள் மியன்மாரில்(முன்னைய பர்மா) தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையுடன் தொடர்புபட்டிருப்பது தெரியவந்தது. மேலதிக அவதானிப்பில் இந்தப் பதிவுகள் குறித்த அசல் தலைப்புகள் யாவும் பர்மிய மொழியில் இருந்தன என்பதையும் அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. அந்த தலைப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது: “கோவிட் -19 தொற்றுநோயால் இன்று 22 பேர் இறந்தனர்…. இன்று மியாவடி மருத்துவமனையின் பிணவறையில் உள்ள இறந்த உடல்களின் படங்கள்.”
தொடர்புடைய புகைப்படம்:
https://cutt.ly/rQbCXjx
அசல் புகைப்படங்கள் 2021 ஜூலை 15 அன்று மியன்மாரின் மனித மீட்பு அமைப்பின் தலைவரான “U Hla Tun” இனால் வெளியிடப்பட்டது. அவர் தனது பதிவில், தனது அமைப்பின் தன்னார்வலர்கள் இந்த இறந்த உடல்களை தென்கிழக்கு மியன்மாரின் கயின் மாநிலத்தில் உள்ள மியாவடி என்ற நகரத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
மூலம் – https://cutt.ly/wQbMz9y
மேலும், அதே தலைப்புடன் கூடிய அதே படம் வியட்நாமிய மற்றும் இந்தோனேசிய சமூக ஊடக தளங்களிலும் பரப்பப்பட்டது. இது வியட்நாமின் முக்கிய ஆங்கில செய்தி வலைத்தளம் “வியட்நாம் நியூஸ்” மூலமும், வியட்நாமிய செய்தி அலைவரிசை “KENH VTC14” மூலமும் உறுதிப்படுத்தப்பட்டது. போலிச் செய்திகளை கையாளும் வியட்நாம் மையம் – VAFC (வானொலி, தொலைக்காட்சி மற்றும் இலத்திரனியல் தகவல் திணைக்களம், தகவல் தொடர்பாடல் அமைச்சகம்) இந்த புகைப்படங்கள் வேறு எந்த நாட்டிலிருந்தும் அல்லாமல், மியன்மாரில் இருந்து வெளியானவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மூலம் – வியட்நாம் நியூஸ்.
மூலம் – KENH VTC14
எனவே, கோவிட் -19 தொற்று காரணமாக சீல் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் உடல்களைக் கொண்ட மேற்கண்ட படங்கள் இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ எடுக்கப்படவில்லை என்பதும், அவை மியன்மாரில் எடுக்கப்பட்டவை என்பதும் உறுதியாகிறது. அத்தோடு, இலங்கையில் நடக்கும் போராட்டங்களின் தற்போதைய நிகழ்வுகளுக்கும் அவற்றிற்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்.