நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே அதிகரிக்கும் மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த சட்டம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் தனிநபர் வியாபாரத்திற்கான அதிகபட்ச அபராதம் 20,000 ரூபாவில் இருந்து 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு நிறுவனத்திற்கான அதிகபட்ச அபராதம் 200,000 ரூபாவில் இருந்து 1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தனி நபருக்கான குறைந்தபட்ச அபராதம் 1,000 ரூபாவில் இருந்து 10,000 ரூபாவாகவும், ஒரு நிறுவனத்திற்கான குறைந்தபட்ச அபராதம் 10,000 ரூபாவில் இருந்து 500,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.