அப்ரா அன்ஸார்.
ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் ” சுப்பர் 12″ சுற்று போட்டிகள் இன்றைய தினம் (23) ஆரம்பமானது. முதலாவது போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையில் அபூதாபி ஷெய்க் ஸெய்ட் மைதானத்தில் இன்று மாலை இடம்பெற்றது. இப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.119 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 35 ஓட்டங்களை 34 பந்துகளில் பெற்றுக் கொண்டார்.தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 2 விக்கெட்டுகளையும் ,கசிசோ ரபாடா , கேசவ் மகராஜ் மற்றும் தப்ரிஸ் ஷம்ஸி தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் எய்டன் மார்க்ரம் 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சில் ஜோஜ் ஹெசில்வூட்( 2/19), மற்றும் மிச்சல் ஸ்டார்க் ( 2/31) , எடன் ஜாம்பாவும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
இரண்டாவது போட்டியாக தற்போது இங்கிலாந்து மற்றும் மேற்கந்திய தீவுகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.