சைவத் தமிழர்களுக்கென்று ஒரு மதிப்புமிகு அடையாளம் தந்தவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் பல்துறை ஆளுமை மிக்க தீர்க்கதரிசனப் பார்வை கொண்ட பெருமகனார் செய்த அரும்பணி சைவத் தமிழுலகம் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது. இத் தகு பெருமை மிகுந்தவரின் 142 ஆவது குருபூஜை நன்னாளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நாடளாவிய ரீதியிலே அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழாவும் குருபூஜையும் சேர்ந்த நிகழ்வாக, 27 ஆம் திகதி நவம்பர் 2021 சனிக்கிழமை, காலை 9.30 மணிக்கு, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம், அகில இலங்கை இந்துமாமன்றம், இந்து வித்தியா விருத்திச் சங்கம், இலங்கை சைவ நெறிக் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, கொழும்பு – பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபைத் தலைவர் விடைக் கொடிச் செல்வர் சி.தனபாலா அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, கனடா, சைவ சித்தாந்த பீட இயக்குநர், சைவ சித்தாந்த அறிஞர், வைத்திய கலாநிதி, சிவத்திரு. இ.லம்போதரன் அவர்களின், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் தொடர்பான சிறப்புரை நிகழ்வும் ஏற்பாடாகியுள்ளது.
நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலும் 27.11.2021 சனிக்கிழமை, காலை 8.00 மணிக்கு, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு இடம்பெறவுள்ளது. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர், இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் அவர்களின் ஆசியுரை தெல்லிப்பளை, ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமாகிய செஞ்சொற்செல்வர், கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, சைவப்புலவர், திரு. ஏ.அனுசாந்தன் அவர்களின் ‘நாவலர் பெருமானின் வாக்கும் வாழ்வும்’ என்ற தலைப்பிலான சிறப்புரையோடும் தெல்லிப்பளை, பன்னாலை, கணேசா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளோடும் இடம்பெறவுள்ளது.
காரைதீவுப் பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் அவர்களின் தலைமையில், காரைதீவு, ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் அவர்கள் திருமுன்னிலை வகிக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு,வே.ஜெகதீசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, மாணவர்களின் கலை நிகழ்வுகளோடு காரைதீவு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் 27.11.2021 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
விசேடமாக முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வுகளோடு வடக்கு , கிழக்கு மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அ.உமாமகேஸ்வரன்
பணிப்பாளர்,
இந்து சமய,கலாசார அலுவல்கள் திணைக்களம்