அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத திணைக்கள பொது முகாமையாளருடன் இன்று (27) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய பொதிகளைப் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டுக்களை விநியோகித்தல் முதலான செயற்பாடுகளிலிருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
புகையிரத சமிக்ஞை முறைமையில் நிலவும் குறைபாடுகள் திருத்தப்படல் மற்றும் தொடருந்து பயண கால அட்டவணையை மீளமைத்தல் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்னிறுத்தி புகையிரத அதிபர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.