இஸ்லாமிய அழைப்பாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும், பன்னூலாசிரியரும், குர்ஆன் விரிவுரையாளருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி மரணம் அடைந்தார்.
இந்தியாவின் பிரபல இஸ்லாமிய அறிஞரான மவ்லானா யூசுப் ஜிக்ரா என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். மகளிருக்கான சிறப்பான இஸ்லாமியக் கல்வி நிறுவனமாக முத்திரை பதித்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற ஜாமியத்துஸ் ஸாலிஹாத் (ராம்பூர்) என்கிற பெண்கள் மத்ரஸாவின் முதல்வராகவும் இயங்கி வந்தார். குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவரான அவர், மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி அவர்களிடம் பாடம் பயின்றவர். ஏராளமான நூல்களை எழுதி இருக்கின்றார்.
ஆதாபே ஜிந்தகி என்கிற இவரது நூல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. மணமக்களுக்குத் தரப்படுகின்ற அழகான நூலாக இந்தியத் துணைக்கண்டமே கொண்டாடுகின்ற நூலாக இது பிரபல்யம் பெற்றது. வாழ்க்கைக் கலை என்கிற பெயரில் சென்னை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT)இதனை வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன பதியில் நுழைவிப்பானாக.