காணி அபகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு- கிழக்கும் மாகாணங்களை பிரதிநிதித்துவதப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று காலை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனும் இதில் கலந்துகொண்டார்.
மகாவலி தொல்பொருள் வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு என்னும் போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கட்சிகளின் சமூக உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தவே இவ்வாறு செய்கிறார்கள் என ஜனாதிபதி ஊடக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கு முன் சந்திப்புக்கான அனுமதியின்றி கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்ததாகவும், முன்னதாக திட்டமிடப்பட்ட சந்திப்புகள் காரணமாக ஜனாதிபதி ராஜபக்ஷ எம்.பி.க்களை சந்திக்க முடியாமல் போனதாகவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,
”நேற்றைய தினம் நான் ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு ஒரு செய்தியினை சொல்லிருந்தேன். ஆதாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறினால் ஜனாதிபதி செயலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் வீட்டினையோ முற்றுகையிடுவோம் என தெரிவித்திருந்தேன்.
இன்றைய தினம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடியுள்ளோம்.
இது ஆரம்பம் மாத்திரமே. எமது கோரிக்கையினை நிறைவேற்ற தவறினால் ஜனாதிபதியின் வீட்டினை முடக்குவோம் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
அதேபோன்று இங்கு நாம் போராட்டத்தினை முன்னெடுக்கும் போது, ஊடகவியலாளர்கள் இல்லாத சிலர் வந்து எங்களை புகைப்படம் எடுக்கின்றனர்.
தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள எங்களுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்றால், வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது என்றார்.