பிரித்தானிய மகுடத்திடமிருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக ஸ்தாபிக்கப்பட்ட 74 ஆவது சுதந்திர தினத்தை நாம் பெருமையுடன் நினைவுகூருவோம் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்த யுக புருஷர்கள் ஏராளம். எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமாக சுவாசிக்கும் பூமியை உருவாக்கும் உன்னத நோக்கத்திற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தார்களேயன்றி குறுகிய இலக்குகளை அடைவதற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும், இந்த நேரத்தில் அவர்கள் நாட்டின் உன்னத பெருமைக்கு தகுதியானவர்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த காலத்தை மனசாட்சியுடன் திரும்பிப் பார்க்கும்போது, வெற்றி தோல்விகள் இரண்டும் அளவிட முடியாதவை என்பதை ஒரு நாடாக நாம் நம்பிக்கையுடன் உணர வேண்டும். உண்மையான தேசப்பற்றுடனும், உண்மையான தேசப்பக்தியுடனும் தாய் நாட்டின் உன்னத சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புச் செய்தார்கள் அதே போன்று, போலி தேசபக்தி மற்றும் போலி தேசப்பற்றுடன் தமது குறுகிய நலன்களை கடைப்பிடிக்கும் சந்தர்ப்பவாதக் குழுக்கள் இந் நாட்டில் அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன என்பது நாம் அறிந்ததே.
இறையாண்மை கொண்ட சுதந்திர ஜனநாயக நாடு என்ற கனவு நனவாகும் வரை, வரலாற்றில் சுதந்திர நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த எவரும் எம்மை மன்னிக்க மாட்டார்கள் எனவும், அவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது அவர்களது தூய்மையான மற்றும் உன்னத அபிலாஷைகளுக்காக சுதந்திரமான நாட்டை உருவாக்க நாம் உறுதியாக முன் நிற்பதேயாகும்.
அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், மதம், ஊடகம் போன்ற அனைத்து உள்ளக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தின் பெயரால் பாதுகாக்கப்படல் வேண்டும். அதிகாரவெறி கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் இதைச் செய்ய முடியாது என்பதை வலியுறுத்த வேண்டும்.
இத் தருணத்தில், நமக்குப் பின்னால் இருந்த பல நாடுகள் முன்நோக்கிச் செல்லும் இரகசியத்தை உணர்ந்து கொள்வதும், சந்தர்ப்பவாதம், குறுகிய மனப்பான்மையை அகற்றி, தாய்நாட்டை நிலைநிறுத்துவதற்கான நடைமுறைச் செயற்திட்டத்தை நோக்கிச் செல்வதே முதலாவதும், இரண்டாவதும் மற்றும் மூன்றாவதுமான முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்.
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்து போராடிய அனைவருக்கும் உரிய மரியாதையை மிகுந்த பக்தியுடன் வழங்க வேண்டும்.அவர்கள் விரும்பிய சுதந்திரம் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து விடுதலை பெற்ற நாளை பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையர்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கும் வகையில் அந்த முன்னேற்றத்தை படிப்படியாக முன்னெடுத்துச் சென்று ஒரு வளமான சமூகமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதாகும்.
அந்தப் போராட்டத்தில் வெற்றி பெறவும், வளர்ந்த, நவீன, தேசமாக பெருமையுடன் செயற்பட வலிமையும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.