இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிகபடியாக, அணித் தலைவர் தசுன் சானக்க 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் கேன் ரிச்சர்ட்சன் 21 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந் நிலையில், 122 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாக, கிளேன் மெக்ஸ்வெல் 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில், இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இதற்கமைய, அவுஸ்திரேலிய அணி தொடரை 3 -0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.