ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்படும் தீர்மானங்களில், இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு இருக்க வேண்டும் என ரஷ்யா கோரியுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளன.
பொருளாதாரத் தடையை சந்திக்கத் தயாராக உள்ளதாக ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், கருத்து வெளியிடுகையில்,
‘ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும். அமைதியான வழியில் தீர்வு கிடைக்கும் என இந்தியா நம்புகிறது’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் பொலிகா, ‘உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு தந்து உதவ வேண்டும். சாதகமான அணுகுமுறையை அளிக்க வேண்டும். பிரதமர் மோடி ரஷ்யா அதிபர் புடினைத் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.
இந்தியாவின் பங்களிப்பை தர வேண்டும். மோடி சொன்னால் புடின் அதைக் கேட்கக்கூடும்’ எனக் கூறியுள்ளார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுடன், ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக தொலைபேசியில் உரையாடினார்.
இதன்போது, உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து புடின் விவரித்துள்ளார்.
வன்முறையை விடுத்து இராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக மாணவர்களின் நிலை கவலையளிப்பதாக புடினிடம் மோடி தெரிவித்துள்ளார்.
அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.