நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்கள் மூலம், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை, தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்திடம் உத்தரவு கோரியுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் அவர்களால் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 11, 12(1), 13(4), 14(1)(g), 14(1)(h) மற்றும் 14A ஆகிய பிரிவுகளின் கீழ் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அல்லது ஆபத்தில் இருப்பதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அமைச்சரவை, மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர், பல அமைச்சுக்களின் செயலாளர்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் ஆகியோர் மனுக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நாடு தற்போது நீண்ட வரிசையில் நிற்கிறது, கடுமையான தட்டுப்பாடு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் கூர்மையான அதிகரிப்பு காரணமாக மக்கள் போராட்டங்கள் மற்றும் பொது அமைதியின்மை ஆகியவற்றைக் காண்கிறோம் என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள், மின்சாரம், எரிவாயு, உணவு, பால் மா மற்றும் மருந்துப் பொருட்களுக்கான கடுமையான பற்றாக்குறையின் விளைவாக இலங்கை தற்போது முன்னோடியில்லாத பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை, சமபாதுகாப்பு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட குடியரசின் குடிமக்களின் உயிர்வாழ்வதற்கும், இருப்புக்கும் இன்றியமையாததாகக் கருதப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் கடுமையான பற்றாக்குறை காரணமாக நீதிமன்றத்திற்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக குறித்த மனுவில் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் அமைதியின்மை மற்றும் பொது எதிர்ப்புக்களைக் கருத்தில் கொண்டு, நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்து, ஆட்சிக்கு கணிசமான அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான கணிசமான, உண்மையான மற்றும் பாரதூரமான அச்சுறுத்தல் இருப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் அஞ்சுவதாக குறிப்பிட்டுள்ளது.