திரவ பெட்ரோலிய எரிவாயு தாங்கிகளுக்கான கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்களான லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லாஃப்ஸ் கேஸ் ஆகியவை கையிருப்பு கிடைக்காத காரணத்தால் நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்தன.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள எரிவாயு தாங்கிகளுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது.
எரிவாயுவை இறக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளதுடன், உள்நாட்டு எரிவாயு விநியோகம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகத் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது எல்பி எரிவாயு சிலிண்டர்கள் வணிக பயன்பாட்டிற்காக மட்டுமே விநியோகிக்கப்படுவதாக எரிவாயு நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் சுமார் 10 நாட்களாக இலங்கை கடல் எல்லையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள இரண்டு கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய அந்நியச் செலாவணியை லிட்ரோ கேஸ் இன்னும் பெறவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு கப்பலுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் கிட்டத்தட்ட (USD- 18,000) செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தாமதமாக செலுத்தியதற்காக இரண்டு சரக்குக் கப்பல்களுக்கும் சுமார் (USD 360,000) செலுத்தப்பட உள்ளது.
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
இந்த நிலைமை உணவகங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அவற்றில் சில கடுமையான சமையல் எரிவாயு பற்றாக்குறையின் விளைவாக பல உணவகங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.