அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்பு கொள்கை விவகாரங்களை துணைச் செயலாளர் நுலாண்ட் மேற்பார்வையிடுகிறார்.
இந்த விஜயத்தின் போது, துணைச் செயலாளர் நுலாண்ட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்க உள்ளார்.
நாளையதினம், (23) புதன்கிழமை அன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெறும் இலங்கை – அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் 4ஆவது அமர்வுக்கு அமைச்சர் பீரிஸ் மற்றும் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆகியோர் இணைத் தலைமை தாங்குவார்கள்.
மேலும், துணைச் செயலாளர் நுலாண்ட் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று வர்த்தகத்தை பார்வையிடவுள்ளார்.
இலங்கை – அமெரிக்க கூட்டாண்மை உரையாடல் கடந்த 2019 ஆம் ஆண்டு வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்றது.
இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கான ஒரு முக்கியமான தளமாக இந்த கூட்டு உரையாடல் உள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் இந்தோ-பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி ஆகியோர் இந்த விஜயத்தில் துணைச் செயலாளர் நுலாண்டுடன் வருகை தரவுள்ளனர்.