மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலண்ட் இதனைத் தெரிவித்தார்.
அதேநேரம், வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்க எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, மிகவும் கடினமான மற்றும் முக்கிய தருணத்தில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இந்த தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெற இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவு துணிச்சலான நடவடிக்கை என அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜனநாயகத்தை உறுதி செய்ய மாகாணசபைத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
இதன்போது சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம், மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி அமெரிக்க செயலாளரிடம் விளக்கினார்.
இந்த முயற்சிகளைப் பாராட்டிய துணைச் செயலாளர், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க பசுமைத் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுலாண்ட் தெரிவித்தார்.
அத்தோடு, நாட்டில் கல்வி வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்திய செயலாளர், தனியார் துறையினரின் பங்களிப்புடன் உயர் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏனைய நாடுகளில் இடம்பெற்று வரும் பல்வேறு அபிவிருத்திகளின் தாக்கத்தை குறைப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல தீர்மானித்ததாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும், இந்த முடிவையும், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தங்களையும் பாராட்டினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் ஊடாக மின் உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கு உதவுமாறு ஜனாதிபதி தூதுக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.