5 ஆவது ‘பிம்ஸ்டெக்’ மாநாடு கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
அதற்கமைய பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி எனப்படும் ‘பிம்ஸ்டெக்’ மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமை தாங்கவுள்ளதுடன் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சர்களும் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
அதேநேரம், மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாக பங்கேற்கவுள்ளார். உச்சி மாநாடு மற்றும் தொடர்ச்சியான கூட்டங்களின் போது, பிராந்திய குழுவாக அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இந்த மாநாட்டின் போது பிம்ஸ்டெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான சவால்கள் மற்றும் அனைத்து பிம்ஸ்டெக் உறுப்பினர்களும் எதிர்கொள்ளும் சர்வதேச அமைப்பில் உள்ள நிச்சயமற்ற நிலைகள் ஆகியவை உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய விடயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிம்ஸ்டெக் மாநாட்டின் செயலாளர் நாயகம் Tenzin Lekphell மார்ச் 26 அன்று இலங்கை வந்திருந்த நிலையில், உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இரவு இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..