கல்பிட்டியிலிருந்து அனுராதபுரம் வரை முன்னெடுக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் பேரணியை இலங்கை பொலிஸார் இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டு தனியார் நிறுவனங்களுக்காக இந்த பேரணியை நடத்துவதற்கு ‘ஸ்பின் ரைடர் கிளப்’ என்ற தனியார் மோட்டார் சைக்கிள் அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்ப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மீரிகமவில் இருந்து கல்பிட்டி ஊடாக அனுராதபுரம் வரை இரண்டு கட்டங்களாக மார்ச் 17 முதல் 19 வரை மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்ற காரணத்திற்காக பேரணி நடத்துவதற்கு பல நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்த பேரணியின் முதல் கட்டம் நேற்று மீரிகமவில் இருந்து கல்பிட்டி வரை முன்னெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், நாடு எரிபொருள் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நேரத்தில் இதுபோன்ற பேரணிக்கு அனுமதி அளித்த பொலிஸாரையும் அரசாங்கத்தையும் பொதுமக்கள் கண்டித்துள்ளனர்.
மேலும், பேரணிக்கு அனுமதி வழங்குவதற்காக பொலிஸாரால் விதிக்கப்பட்டிருந்த பல நிபந்தனைகளை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலர் மீறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இன்று முதல் நாளை வரை நடைபெறவிருந்த கல்பிட்டியில் இருந்து அனுராதபுரம் வரையிலான இரண்டாம் கட்ட பேரணியை பொலிஸார் இடைநிறுத்தியுள்ளனர்.
பேரணிக்கான நிபந்தனைகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸார் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.